இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் நேற்று சனிக்கிழமை தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டதுடன் மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவ சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“விடுவிக்கப்பட்ட” பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல், அரசு மேற்கொண்டுவரும் புனர் நிர்மாணப்பணிகள், மற்றும் செயற்றிட்டவேலைகள், அமைதியை நிலைநாட்டல் என்பனவற்றில் இராணுவத்தினர் முக்கிய பங்காற்ற முடியும். இராணுவத்தில் பல்வேறு தொழில் துறையில் ஈடுபடக்கூடியவர்கள் உள்ளதால், அந்தந்தத்துறைகளில் அவர்களை ஈடுபடுத்தி அரசின் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைக்க முடியும்.
இராணுவத்தில் தற்போது இரண்டு இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இராணுவத்தில் தேவையானவற்றுக்கு அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். வன்னியில் 'விடுவிக்கப்பட்ட' பிரதேசம் முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மீள்குடியேற்ற நடவடிக்கையில் பாதுகாப்பு வழங்கவும் இராணுவ முகாம்களை அமைக்க எண்ணியுள்ளோம்.
“விடுவிக்கப்பட்ட” பிரதேசங்களில் இராணுவத்தினர் உள்ளனர். ஆனால் தற்காலிக முகாம்களிலேயே இராணுவத்தினர் தங்கியுள்ளனர். நிரந்தர முகாம்களை அமைப்பதற்கு அரச காணிகள் தொடர்பான விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கிராமங்கள், நகரங்களில் நிரந்தர முகாம்களை அமைக்கவும் எண்ணியுள்ளோம். இராணுவத்தினர் ஒன்றில் யுத்தம் புரியவேண்டும் அல்லது பயிற்சியில் ஈடுபடவேண்டும். யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால் மீண்டும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
நாட்டில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலை நாட்டுவதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும். அமைதியை நிலைநாட்டும் பணி காவல்துறையிடம் உள்ளது. எனினும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் உள்ளனர்.
|