கொழும்பு மட்டக்குளியில் நேற்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசியசபைக் கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்றைய தினம் தற்போதைய ஆறாவது பாராளுமன்றத்தின் கடைசி தினமாக அமையலாம். நாளை முதல் நான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக குறிப்பிடப்படலாம். எனினும் இந்த பாராளுமன்றத்திற்கு என்னை தெரிவு செய்த கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு நான் நேர்மையுடனும், கொள்கை மாறாமலும் பணி புரிந்தேன் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
எதிர்வரும் புதிய ஏழாவது பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் தெரிவு செய்யப்படும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் திரும்பி வருவேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி இன்று மேல் மாகாணத்திலிருந்து சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்றிருக்கின்றது.
இந்த ஆறாவது பாராளுமன்ற காலகட்டத்திலேயே எமது கட்சியின் இந்த துரித வளர்ச்சி ஏற்பட்டது.
எமது மக்கள் கொழும்பிலும், மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் காணாமல்போன பொழுதும், கடத்தப்பட்ட பொழுதும் நாம் இந்த அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தோம். மக்களை அணித்திரட்டி தலைநகரத்தில் போராட்டங்களை நடத்தினோம். எமது கட்சியின் எதிர்ப்பு குரல் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் எதிரொலித்தது.
என்னுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டங்களில் களமிறங்கி மக்கள் கண்காணிப்புக்குழுவை அமைத்த எனது நண்பன் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். மக்களுக்காக உயிர்நீத்த ரவிராஜின் ஆன்மா எனக்குள்ளே வாழ்வதாக நான் நினைக்கின்றேன். நாங்கள் இருவரும் தீர்மானித்து முன்னெடுத்த அநீதிகளுக்கு எதிரான போராட்ட இலட்சியங்களிலிருந்து நான் பின்வாங்கவில்லை. இதுவே ரவிராஜிற்கு நான் செய்கின்ற அஞ்சலியாகும்.
இக்காரணங்களுக்காகவே இன்று நமது மக்கள் எமது கட்சியின் மீதும், என்மீதும் பற்றையும், பாசத்தையும் கொண்டுள்ளார்கள். இது சிலருக்கு புரிவதில்லை. இவர்கள் நாம் பெற்றுள்ள இந்த மக்கள் அபிமானம் எமக்கு சுலபமாக கிடைத்துவிட்டதாக நினைக்கின்றார்கள். பல்வேறு சவால்கள், மரண அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை கடந்தே இந்த இடத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தாலும், அமைச்சு பதவிகளாலும் எம்மை விலைக்கு வாங்க நினைத்தவர்களை நிராகரித்துவிட்டே நாம் முன்னேறியுள்ளோம்.
எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலே எமது கட்சி நாடுமுழுக்க வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்ல விரும்புவது நியாயமான எதிர்பார்ப்பாகும். அதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது. இதை இன்று நாம் கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி தலைமை புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்களின் உரிமைக் குரலான எமது கட்சிக்கு அளிக்கும் அங்கீகாரம், தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகின்ற கௌரவமாகும். தேவைக்கு பயன்படுத்திவிட்டு தூர எறியும் கருவேப்பில்லையாக எம்மை பயன்படுத்த ஐக்கிய தேசிய கட்சி நினைக்குமானால் அதற்கான பாரிய விலையை அக்கட்சி எதிர்வரும் தேர்தலின்போது கொடுக்கவேண்டிவரும்.
இக்கூட்டத்தில் முன்னணியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், மாகாணசபை உறுப்பினர்களான ராஜேந்திரன், பிரகாஷ் கணேசன் உள்ளிட்ட பலருடன் கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, களுத்துறை, கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பிரதிநிதிகளும் விசேட விருந்தினராக ஐதேகவின் உதவிச்செயலாளரான டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்பியும் கலந்துகொண்டனர். |